Wednesday, 12 February 2014

உருகுதே மருகுதே - காதல் காட்சிகள்

உருகுதே மருகுதே - காதல் காட்சிகள்

காதலில் மகா உன்னதமான ஒரு உணர்வு இருக்கிறதென்பதை நம் மக்களுக்கு முன்மொழிந்ததில் தமிழ் சினிமாவுக்கு கடலளவு பங்கு இருக்கிறது. சினிமா என்ற ஒன்று இல்லையென்றால் காதலைப் பற்றி அறிந்து கொள்ளாமல் காட்டுத்தனமான காமுகர்களாகவே இருந்திருப்பதற்கும் வாய்ப்பு அதிகம். செவ்வியல் படைப்புகளில் என்னதான் ரசம் சொட்டச் சொட்ட காதலைப் பற்றி சொல்லியிருந்தாலும் சினிமா என்கிற மகத்தான ஊடகத்தின் மூலம்தான் அதன் வீரியம் எல்லோரையும் போய் சேர்ந்தது. இன்னும் எழுநூறு வருடத்திற்கு காதலை மட்டுமே வைத்து இங்கு எத்தனை திரைப்படம் வேண்டுமென்றாலும் எடுக்கலாம்.

தமிழ் சினிமாவும், காதலும் இரண்டறக் கலந்து நமக்குள் அப்படியொரு ரஸவாதத்தை நிகழ்த்தியிருக்கிறது. என்னதான் தற்போது உலகசினிமா உள்ளங்கையில் வந்து, பிரித்து மேய்ந்தாலும் ஒருகாலத்தில் உருகி மருகி பார்த்த தமிழ் சினிமா காதல் காட்சிகள் நம் நினைவுக் குப்பைகளை சாதரணமாக கிளறக் கூடியவை. அந்த காட்சிகளோடு நம்மை பொருத்திப் பார்த்து சிரித்திருக்கிறோம், அழுதிருக்கிறோம், ஏங்கியிருக்கிறோம், சுய அனுபவங்கள் இல்லாத எவரொருவரும் கூட கதாபாத்திரங்களோடு ஒன்றி காட்சிகளில் லயித்திருக்கிறோம். அப்படியாய் நான் பார்த்து இன்னும் என் நாவுக்கடியில் கற்கண்டாய் தித்திக்கும், குழாய் வெந்நீராய் உள்ளுக்குள் சொட்டிக் கொண்டிருக்கும் காதல் காட்சிகளையும் வசனங்களையும் படிப்பவர்களின் பொறுமையை சோதிக்காதவாறு பகிர்ந்து கொள்வதில் காதல் கொள்கிறேன்..      



ஜானி படத்தில் ஸ்ரீதேவி தன்னுடைய நாணத்தை உடைத்துக் கொண்டு நேரடியாக  ரஜினியிடம் காதலைச் சொல்லும் காட்சி. குறிப்பாக அந்தகாட்சியின் கடைசியில் "அதுக்குள்ள அவசரப்பட்டு என்னென்னமோ பேசிட்டீங்க" என்று அவர் கேட்டதும் "நான் -ப்--டி-த்-தா- ன் பேசுவேன் என்று குழந்தையைப்போல ஸ்ரீதேவி சிணுங்க ஒருவரையொருவர் வெட்கம் பிடுங்க பார்த்து சிரித்துக் கொள்வது மொட்டவிழ்தலைப் போல மெதுவாக காதல் அரும்பும் அற்புத தருணம்  


"உன்மேல பைத்தியமா என்னால இருக்க முடியாது, உனக்கே தெரிஞ்சிடும்"

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சமந்தாவிடம் சிலம்பரசன் சொல்லும் டயலாக் இது. காதலென்பது ஒருமுறைதான் வரும் என்பதெல்லாம் சுத்தப் பொய். ஆனால் எத்தனை பேரை காதலித்தாலும் யாரோ ஒருவரின் மீது தான் நமக்கு சைக்கோசிஸ் இருக்கும்/இருந்திருக்கும். அந்த கிறுக்குத்தனம் பின்பு எவர்மீதும் வராது. அதை நாகரீகமாக சரியான  இடத்தில் இயக்குநர் கெளதம் மேனன் இன்செர்ட் செய்திருப்பார். கெளதம் ராக்ஸ்.


மௌனராகம் படத்தில் மோகன் ரேவதிக்கு ஒரு கிஃப்ட் வாங்கி அதைதிறக்கச் சொல்லுவார், "இதுல நானா ஆசைப்பட்டு வாங்கினது ஒன்னு இருக்கு, நீயா என்கிட்டே ஆசைபட்டு கேட்டது ஒன்னு இருக்கு, உனக்கு எது வேணும்னாலும் எனக்கு சம்மதம்தான் என்று அவர் சொல்ல கொலுசை ஏறெடுத்துக் கூட பார்க்கமால் விவாகரத்துப் பத்திரத்தில் ரேவதி கையெழுத்துப் போட அவர் முகத்தில் எந்த அசைவுமிருக்காது இதனுடைய follow-up காட்சி படத்தின் இறுதியில் வரும். ரேவதி மெட்ராசுக்கு செல்வதற்காக ஸ்டேஷனில் இருக்க மோகன் அங்கு வந்து இந்தா நீ என்கிட்டே ஆசைப்பட்டு கேட்ட விவாகரத்து வெச்சிக்க என்று பேப்பரை கையில் கொடுத்ததும் செய்வதறியாது திகைத்து ரேவதி கடையில் பரிதவித்து வசனம் பேசும் காட்சிகள் உருகி மருக்கக்கூடியவை..  
      

"கண்ட நாள் முதல்" படத்தின் க்ளைமேக்ஸ். 

ஒரு சின்ன ஈகோவினால் இருவரும் அடக்கி வைத்திருந்த காதல் பிரவாகமாய் ஊற்றெடுக்கும் அழகான காட்சி. அதுவும் கடைசியில் லைலாவிடம் பிரசன்னா கன்னத்தில் வாங்கும் ப்பளார் எல்லா ஈகோயிஸ்ட்டுகளும் வாங்க வேண்டிய அரை.



ராஜபார்வை படத்தில் ஒரு பாதகமான சூழலில் கமலஹாசனை விட்டு மாதவி பிரிந்திருக்க நேரிடும். ஆற்றாமையினால் புலம்பும் கமல் தன் நண்பன் ஒய்.ஜி மகேந்திரனிடம் "டேய் எனக்கு எதுவுமே தெரியலடா எல்லாம் இருட்டா இருக்குடா" என்பார். பல ஆண்டுகளாக கண் பார்வையே இல்லாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கும் வயலினிஸ்ட் ரகு முதன்முறையாக தான் ஒரு குருடன் என்று உணர்கின்ற காவிய சோகமான காட்சி அது.



சினிமாவில் தன்னை நிரூபித்தே ஆகவேண்டிய கட்டாயம், டென்ஷன், கிசுகிசு இதற்கிடையில் தன் காதலியை சுத்தமாய் மறந்தே போனவன் ஒரு படம் எடுத்து சாதித்ததும் அவள் வீட்டிற்கு ஓடிவந்து சொல்லும்போது "நீயும் என்னை அதிர்ஷ்டம் இல்லாதவனு நெனச்சிட்டல" என்று அவனை நிராகரிப்பாள். ப்ளீஸ் சௌமியா என்ன புரிஞ்சிக்கோ என்று எவ்வளவு கெஞ்சியும் கதவை சாத்திவிடுவாள். ரோட்டு வாசலுக்கு வந்தவன் அவள் வீட்டை திரும்பி பார்க்கும் போது பால்கனியில் நின்று இவனையே பார்ப்பாள். “என்ன சொல்ல போகிறாய்” என்கிற பாடல் நாதஸ்வர இசையோடு பின்னணியில் ஒலிக்க அஜீத் ஏக்கமாய் தபுவை நோக்கி பார்க்கும் காட்சியை இதற்கு மேல் எழுதில் சொல்வது என்னளவில் சிரமம்.



தன் மடியிலேயே காதலி அபிராமியின் உயிர் போனதை நம்ப முடியாமல் அவள் மூச்சு விடுகிறாளா என்று அவள் முகத்தை தன் காதோடு ஒத்தி ஒத்திப் பார்த்து பின்பு இறந்து விட்டாளென்று தெரிந்ததும் பீறிட்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்டு "புண்ணியம் செய்தனமே மனமே....என்று அபிராமி அந்தாதியை பாடியபடி அபிராமியை காட்டுக்குள் தூக்கி நடந்து போகும் காட்சி. இன்னும் எத்தனை பெரிய திறமைசாலிகள் வந்தாலும் இதுபோன்றொரு காதல் காட்சியை எடுக்க முடியாதென்று திடமாக நம்புகிறேன்.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்..



"காதலிக்கிறப்போ உன் பின்னாடி சுத்தினது காதலில்லை, இப்போ உன்ன தொலைச்சிட்டு தெரு தெருவா தேடினேனே இதான்.. ப்ளீஸ் ஷக்தி  முழிச்சுக்க நீ இல்லாம என்னால வாழ முடியாது" என்று அவன் கெஞ்ச கெஞ்ச அவள் கண்ணிமைகள் மெல்ல திறக்க ஆரம்பிக்கும்.. அவனை அருகில் அழைத்து பயந்துட்டியா? என்று கேட்பாள்..”உயிரே போய்ச்சு” என்று அவளிடம் சொல்லி உடனே கேட்பான், “எனக்காக எதுவேண்ணா செய்வியா?

I Love You.

எனக்காக ட்ரைன்ல இருந்து குதிப்பியா?

I Love you.                                             

அப்டினா என்ன mean பண்ற?

தெரியல ஆனா I Love you.

அப்படியே திரை இருள I Love you. I Love you. I Love you. என்கிற வார்த்தை மட்டும் காதுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கும்.

எதேதோ படத்திலிருந்து இன்னும் சொல்ல நினைக்கின்ற காட்சிகள் ஏராளமாய் இருக்கின்ற போதிலும் கடற்கரையிலிருந்து கிளம்ப மறுக்கும் குழந்தை போலவே இங்கிருந்து விடை பெறுகிறேன்..
      
ஆக்கம்: தமிழ்ப் பிரபா
Happy valentine’s Day




                                                 

Monday, 3 February 2014

எழுதக் கூடாத கதை

கீழ் வயிற்றுப் பசியை தீர்த்துக் கொள்ள தேடிவரும் ஆண்களுக்கு அடைக்கலமாய் மெரினா பீச்சில் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்களில் சுங்குவும் ஒருத்தி -அவளின் இயற்பெயர் பாக்கியலெட்சுமி- நிராதரவாய் ஆனபிறகு வாழ வழி இல்லாமல் பிழைப்புக்காக நேரடியாக இந்த தொழிலுக்கு வந்தவளில்லை. தன் 9 வயது மகனுக்கும், கணவனுக்கும் மதியம் சாப்பாடு கூட செய்து வைக்காமல் சபலம் தலைக்கேறி எதிர் வீட்டு தன்ராஜுடன் தினைந்து வருடங்களுக்கு முன்பு மறையனூரில் இருந்து சென்னைக்கு ஓடி வந்தவள் பின்பு ஓட்டு போடுவதற்கு என்று கூட ஒருமுறையேனும் ஊர்ப்பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. தன்ராஜை நம்பி வந்தவளின் வாழ்க்கையில் விதி சிக்குக் கோலம் போட்டது போல விளையாடி கடைசியில் கண்ணகி சிலையின் பின்புறம் அவளின் கைங்கரியத்தை ஆரம்பிக்க வைத்தது. 

ஒருமுறை இவளுடன் சல்லாபித்துக் கொண்டிருந்த ஒருவன், என் காதலிக்கு நான் வைத்த செல்லப்பெயர் சுங்கு. உன் முகவெட்டும் அவளைப் போலத்தான் இருக்கிறது என்று சொல்லி பாக்கியலெட்சுமியின் அடித்தொண்டையை தன் முகத்தால் கன்னுக்குட்டி நீவுவது போல நீவினான். அவளுக்கும் அந்தப் பெயர் பிடித்துப் போக அன்று முதல் சுங்கு!!

சுங்குவுக்கு 47 வயது ஆகிறது. இப்போதும் அவள் யாருக்கும் சளைத்தவளில்லை என தன் சக தோழியான ரவுசம்மாவிடம் அடிக்கடி பொறமை கலந்த பாராட்டைப் பெறுவாள் - ரவுசம்மா நாயுடுப் பேட்டையிலிருந்து ப்ரொபஷ்னலாக இறக்குமதி ஆனவள்- மவுண்ட் ரோட் அண்ணா தியேட்டரில் "முத்துக்கு முத்தாக" படத்தை எச்சக்குடி பெஞ்சமினுடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் முதன்முதலில் சுங்குவுக்கு அறிமுகமானாள். அன்று முதல் சேர்ந்து தொழில் செய்ய ஆரம்பித்தார்கள். வயது அதிகமாகி விட்டது என்று தன்னிலை உணர்ந்த இருவரும் கையில் குடையை வைத்துக் கொண்டு மெரினா பீச்சில் ஆளுக்கொரு பக்கம் சென்று உரும வெயிலிலும் பின்மாலைப் பொழுதிலும் தேடி வரும் இளைஞர்களுக்கும் காது முடி நரைத்துப் போன கிழடுகளுக்கும் பெய்ட் சர்வீஸ் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.. 

இன்று…..
மதியம் 1 மணி இருக்கும். வெயில் மனிதர்களின் முதுகிலேறி தன் உக்கிரத்தை காட்டிக் கொண்டிருந்தது. தீவுத்திடல் மைதானத்தின் இடப்பக்கமுள்ள குடிசைப் பகுதியில் வசித்துக் கொண்டிருக்கும் ரவுசம்மாவின் வீட்டிற்க்கு போலிஸும், ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலிஸ் உலகாவும் ஆட்டோவில் சென்று அவளை அவசரமாக ஜி.எச்'க்கு அதே ஆட்டோவில் அழைத்துச் சென்றார்கள். மூவரும் போகிற வழியில் போலீஸ்கார் தன் பெண்ணின் திருமண முகூர்த்த நாளைக் குறித்து அய்யரிடம் போனில் பேசிக் கொண்டே வந்ததால் எதற்கு அழைத்துச் செல்கிறீர்கள் என்று இவளால் கேட்க முடியவில்லை உடன்வந்த உலகாவை கேட்டாலும் சார் சொல்லுவார் கம்முனு வா என்றான். ஐந்து நிமிடத்தில் ஜி.எச் வந்தடைந்தார்கள்.

உள்ளே நுழைந்ததும் அங்கு பிணவறையின் வாசலுக்கு ஓரமாய் ஸ்ட்ரக்ச்சரில் கரை படிந்த வெள்ளைத் துணியால் மூடி வைக்கப்பட்டிருந்த உடலை காண்பித்து "இது உன் கூட இருக்குமே அந்த பொம்பள தானே பாருஎன்று உலகா கேட்டதும் ரவுசம்மா தாமதிக்காது அழ ஆரம்பித்தாள். தண்ணீரில் மூழ்கி உப்பலாகி இறந்துப் போன மோட்டெலியை காகம் தன் இஸ்டத்திற்கு கொத்தி விட்டுச் சென்றது போல இருந்தது சுங்குவின் முகம். சடலம் உடனடியாக போஸ்ட்மார்ட்டத்துக்காக உள்ளே எடுத்துச் செல்லப்பட்டது.

"
மவ்ட்ரு மாரி தெர்ல சூசைட் தான் போலக்து, கூவாத்துல உயிந்து சாவுற அளவுக்கு இதுக்கு இன்னா கேடு, எங்க உயிந்துதோ தெர்ல, ஸ்கை வாக் பக்கத்துலகிற கூவாத்துல மெதந்துனு இந்திது. ஒன்னா தானே தொய்லுக்கு போவீங் இன்னா மேட்டருனு சுகுரா சொல்ட்ட்டு, காயில்லயெ போன் அச்சி அனுப்பி உட்டானுங்கனு அவ்ரு வேற செம்ம காண்டுலக்றாரு" என கொஞ்சம் தள்ளி நின்றபடி வார்ட் பாய் ஒருவருடன் சிரித்து சிரித்து குசலம் விசாரித்துக் கொண்டிருக்கும் போலீஸை காட்டி ரவுசம்மாவிடம் விசாரணை செய்து கொண்டிருந்தான் உலகா என்கிற உலகநாதன். 

(
உலகாவைப் பற்றி சின்ன பிளாஷ்பேக்...

அமைந்தகரை போலிஸ் ஸ்டேசனுக்கு காலையில் அடையாளம் காண்பிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்ட சுங்குவின் புகைப்படம் அங்கிருந்த எஸ்.ஐயின் மேசை மீது இருந்தது. பொட்லம் கேஸில் கைதாகி ரிலீஸ் ஆவதற்காக கையெழுத்து போட அவருக்கு முன்பு நின்று கொண்டிருந்த உலகா, சுங்குவின் புகைப்படத்தைப் பார்த்து " சார் இது எனுக்கு தெரியும் சார், பீச் கிராக்கி இது தோஸ்த் ரவுசும் தெரியும் என்று ரிலீஸ் ஆகப்போகிற ஜாலியில் தெரியாத்தனமாக வாயைக் குடுத்து டெம்ப்ரவரி ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலிஸாக தன்னை உட்படுத்திக் கொண்டவன்.) 

ரவுசம்மாவின் அழுகை இப்போது விசும்பலாக மாறி இருந்தது. போலிஸ் வந்து தனது கட்டையான குரலில் ரவுசை அதட்ட ஆரம்பித்தார். "பாபு நாக்கு ஏமி தெளிது அதி ரெண்ட் நாளைக்கு முந்திப் பாத்துது" என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சூசைட் தான் என்கிற போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், தனக்குத் தெரிந்த வார்ட் பாய் மூலம் துரிதமாய் இரண்டு மணி நேரத்தில் கையில் கிடைக்க, உன் போன் நம்பரை ஒரு துண்டு பேப்பர்ல எழுதி குடுத்துட்டு இப்போதைக்கு போ என்றார் போலீஸ்காரர். 

ரவுசம்மா ஏற்கனவே எச்சக்குடி பெஞ்சமினுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லியிருந்ததால் அவனும் சரியாய் அங்கு வந்தான், இருவரும் மருத்துவமனை வளாகத்திலிருந்து வெளியே வந்து எதுக்கு சுங்கு இப்படி பண்ணிச்சு என்று பேசிக்கொண்டே சாலையை கடந்து எதிரிலிருக்கும் டீ கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருக்கும் போது " பெற்ற தாயிடமே விலை பேச நேர்ந்த அவமானத்தால் உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை" என்கிற தினத்தந்தி பெட்டிச் செய்தியை அவர்களுக்கு அருகில் அமர்ந்து வெங்காய போண்டாவை தின்றபடியே ஒரு பெரியவர் எழுத்துக் கூட்டி படித்துக் கொண்டிருந்தார்